‘ப்ராமிஸ்’ – சத்தியத்தின் வலிமையை உணர்த்தும் புதிய திரைப்படம்
கார்த்திகை 29, 2025 Published by aathemovie

‘ப்ராமிஸ்’ என்ற சொல்லுக்குச் சத்தியம், உறுதி என்று ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. வாய்மொழியாக அளிக்கப்படும் இந்த வாக்குறுதி, எழுதப்பட்ட ஆவணங்களை விடவும் வலிமையானது. காந்தி, அரிச்சந்திரன் போன்றோர் போற்றிய இந்தச் சத்தியத்தை மையமாக வைத்து, உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. இப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாகப் புதுமுகம் நதியா சோமு நடிக்க, சுஜன், அம்ரிஷ், பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் ஒளிப்பதிவிலும், சரவண தீபன் இசையிலும் உருவாகியுள்ள இப்படத்தை சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
படத்தின் கதைக்களம் குறித்துப் பேசிய இயக்குநர், “உலகில் ‘ப்ராமிஸ்’ என்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை இப்படம் பேசுகிறது. குறிப்பாக அம்மா மீதும், தம்பதிகள் இடையேயும் செய்யப்படும் சத்தியம் மிக உயர்ந்தது. அந்த நம்பிக்கை ஒரு கட்டத்தில் உடைபடும்போது, வாழ்க்கை எப்படித் தலைகீழாக மாறுகிறது என்பதையும், அந்தச் சிக்கலிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதையும் உணர்ச்சிகரமான திரைக்கதையாக அமைத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதால், கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் உயிரோட்டமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பிச்சாவரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.















