Download App

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

ஆனி 13, 2026 Published by Natarajan Karuppiah

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.

நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.

அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.

சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News