Download App

நடிகராகவே மக்களுக்கு நல்லது செய்யலாம்: அரசியலுக்கு வர தேவையில்லை – சிவராஜ்குமார் திட்டவட்டம்

மார்கழி 22, 2025 Published by anbuselvid8bbe9c60f

shiv

கர்நாடக சினிமாவின் மூத்த நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார், அரசியலுக்கு வருவது குறித்து தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நடிகராக இருந்துகொண்டே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால், அதிகாரத்துக்காக அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் ’45’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும் இயக்குநருமான அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 25-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார்: “தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலம் தொட்டு விஜயகாந்த், சரத்குமார், விஜய் போன்ற நட்சத்திர நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அதேபோல கர்நாடகாவில் நீங்களும் உபேந்திராவும் அரசியலுக்கு வரவில்லை. ஏன்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், “அரசியல் பற்றி எனக்கு தெரியாது. மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்துகொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்” என்று உறுதியாகப் பேசினார்.

சிவராஜ்குமாரின் இந்தப் பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ’45’ படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்தக் கருத்து கர்நாடக சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.