‘ஜெயிலர் 2’ அப்டேட்: எனது ரோல் முதல் பாகத்தைவிட பெரிது – சிவராஜ்குமார் தகவல்!
மார்கழி 23, 2025 Published by anbuselvid8bbe9c60f

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கன்னட நட்சத்திரம் சிவராஜ்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘ஜெயிலர் 2’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
“இதுவரை ஒரு நாள் ஷூட்டிங் முடித்துவிட்டேன். அடுத்து ஒரு நாள், ஜனவரியில் 3 நாட்கள் என டேட்ஸ் கொடுத்துள்ளேன். ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கதை உருவாகியுள்ளது. முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் எனது கதாபாத்திரம் இம்முறை அதிக நேரம் வரும்” என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
சிவராஜ்குமாரின் இந்த அப்டேட் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!
















