‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சிக்கல்: ஜனவரி 9-ம் தேதி காலை இறுதி தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தை 7, 2026 Published by Natarajan Karuppiah

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. வரும் ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி தற்போது நீதிமன்றப் படியாக ஏறியுள்ளது.
இப்படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தங்களுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில், “படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது. இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஆயுதப் படைகள் தொடர்பான சித்தரிப்புகள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாகவே மறுசீராய்வுக் குழுவின் (Revising Committee) பார்வைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , “ஏற்கனவே தணிக்கை வாரியம் ‘UA’ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்த நிலையில், இறுதி நேரத்தில் எந்த புகாரின் அடிப்படையில் மறுசீராய்வுக்கு அனுப்பப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த புகார்கள் தொடர்பான முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதியைக் குறிப்பிடாமல் தள்ளிவைக்காமல், படம் வெளியாகவிருக்கும் அதே தினமான ஜனவரி 9-ம் தேதி அதிகாலைக்கு ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றமும், அதே சமயம் நீதியின் மீது பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.



















