Download App

முதலமைச்சர் ஸ்டாலினிடம் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார் உருக்கமான புகழாரம்!

கார்த்திகை 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

sivakumar

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு இன்று (நவம்பர் 28) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு பட்டத்தை வழங்கினார்.

விழா மேடையில் உருக்கமாகப் பேசிய நடிகர் சிவகுமார், கலைஞர் கருணாநிதியையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் பெரிதும் புகழ்ந்து தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.

குறிப்பாக, 2018-ல் கோவையில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில், “இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சர் ஆகப் போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே” என்று தான் வாழ்த்தியதை நினைவுகூர்ந்தார். அந்த வாழ்த்து மூன்றே ஆண்டுகளில் (2021 ஏப்ரல் 7) நிறைவேறியதாகவும், இன்று முதலமைச்சராக அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தந்தையின் வழியில் சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாகவும் பாராட்டினார்.

மேலும், தான் 14 வயது வரை வெறும் 14 திரைப்படங்கள் மட்டுமே பார்த்ததாகவும், அவற்றில் ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘இல்லறம்’, ‘இல்லற ஜோதி’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் வரும் கலைஞரின் வசனங்களை 15 வயதிலேயே மனப்பாடம் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“SSLC கூட எழுதாத ஒரு இளைஞர் சங்க இலக்கியத்துக்கு உரை எழுதியவர் கலைஞர். அவருடைய வசனங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை” என்று கலைஞரைப் போற்றிய சிவகுமார், அவரது மகனான முதலமைச்சர் ஸ்டாலின் “காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், வீடு தேடி மருத்துவம்” உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதாகவும், இவர் மீண்டும் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் வாழ்த்தித் தெரிவித்தார்.

இந்த உருக்கமான ஏற்புரை விழா மேடையில் பெரும் உற்சாகத்தையும் கைத்தட்டலையும் பெற்றது.