Download App

கோவிலை விட படிப்பும் முக்கியம் : மாணவர்களுக்காகக் குரல் கொடுத்த ஜி.பி. முத்து!

மார்கழி 24, 2025 Published by Natarajan Karuppiah

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது மாணவர்களின் கல்வி நலன் குறித்துப் பேசி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த அவர், தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியின் நிலை குறித்து வேதனையுடன் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வழக்கமாக நகைச்சுவை மற்றும் தபால்களைப் பிரித்து படிக்கும் வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்க்கும் ஜி.பி. முத்து, இம்முறை ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார். தனது பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கண்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஜி.பி. முத்து வசிக்கும் உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளிக்கு மிக அருகிலேயே ஒரு கோவிலும் உள்ளது. அந்தப் கோவிலில் அதிகாலை முதல் ஒலிபெருக்கி (Loudspeaker) மூலம் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

“காலைல 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா, சாயங்காலம் வரைக்கும் விடாம போடுறாங்க. ஸ்கூல் பக்கத்துலயே இப்படிச் சத்தமா பாட்டு போட்டா பசங்க எப்படிப் படிப்பாங்க?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடந்து வரும் சூழலில், இந்தச் சத்தம் அவர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடுறதால பசங்க ரொம்ப சங்கடப்படுவாங்க. அவங்களால பாடத்துல கவனம் செலுத்த முடியாது” என வேதனை தெரிவித்துள்ளார்.

பக்தி என்பது முக்கியம் என்றாலும், அது அடுத்தவர்களின், குறிப்பாக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடாது என்பது ஜி.பி. முத்துவின் வாதமாக உள்ளது.”கோவிலை விட இப்போ பசங்களோட படிப்பு தான் ரொம்ப முக்கியம். அட்லீஸ்ட் சவுண்டையாவது கொஞ்சம் குறைச்சு வச்சா என்ன?”என்று அவர் அதிகாரிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜி.பி. முத்துவின் இந்த வீடியோவிற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். “பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து முறையான விதிகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாகத் தேர்வு காலங்களில் கோவில் மற்றும் விழா நேரங்களில் சத்தத்தைக் குறைப்பது மாணவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய பாணியில் எதார்த்தமாகப் பேசினாலும், ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை உரக்கச் சொன்ன ஜி.பி. முத்துவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More News