மீண்டும் களமிறங்கும் ‘ஏழுமலை’: வில்லன் வேடங்களுக்கு ‘நோ’ சொன்ன ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
மாசி 11, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், பல தசாப்தங்களாகத் தனது அதிரடி சண்டைக் காட்சிகளால் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார்.
சமீபகாலமாக ‘லியோ’ போன்ற பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அர்ஜுன், தற்போது தனது திரைப்பயணம் குறித்து மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தற்போது அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா பயணம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
கடந்த சில படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன், இனி அந்த வேடங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.”நான் வில்லனாக நடிப்பது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. என்னை எப்போதும் போல வலிமையான, நேர்மறையான (Positive) ஹீரோ வேடங்களில் பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கேற்ப இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

ஆக்ஷன் கிங் ரசிகர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தியாக, அவரது சூப்பர் ஹிட் படமான ‘ஏழுமலை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார்.’ஏழுமலை பார்ட் 2′ படத்தின் கதையை ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகவும், இதற்கான முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.”திரையில் சாதாரணமாகத் தோன்றுவது எனக்குப் பிடிக்காது. என்னை நம்பி தியேட்டருக்கு வரும் மக்களுக்காக உடலமைப்பைத் தயார் செய்து கடினமாக உழைக்க விரும்புகிறேன்” என தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே ‘மங்காத்தா’, ‘லியோ’ எனத் தனது வில்லன் நடிப்பால் முத்திரை பதித்திருந்தாலும், ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பளித்து மீண்டும் ஹீரோவாகவே அதிரடி காட்ட அர்ஜுன் முடிவு செய்திருப்பது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது. ‘சீதா பயணம்’ ரிலீஸைத் தொடர்ந்து ‘ஏழுமலை 2’ குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

















