ஜெயிலர் 2: ஷாரூக்கான் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாரா?
மார்கழி 25, 2025 Published by anbuselvid8bbe9c60f

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் கவுரவ தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
சமீபத்திய பேட்டியில், தற்போது தன்னை கவர்ந்த கதைகள் குறித்து கேட்கப்பட்ட போது, ‘ஜெயிலர் 2’ படத்தை குறிப்பிட்ட மிதுன் சக்கரவர்த்தி, “ரஜினிகாந்த், மோகன்லால், ஷாரூக்கான், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது” என்று கூறினார். இதன் மூலம் ஷாரூக்கானின் பங்கேற்பு உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும், படக்குழு சார்பில் இதுவரை ஷாரூக்கான் நடிப்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, வித்யா பாலன், வினாயகன், சுராஜ் வெஞ்சாரமூடு, சந்தானம் உள்ளிட்டோர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு ஜனவரி மாதத்துக்குள் முழுமையாக முடிவடையும் எனவும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என கூறப்படுகிறது.
ஷாரூக்கான் – ரஜினி கூட்டணி உறுதியானால், இது இந்திய சினிமாவின் மிகப்பெரிய பான்-இந்தியா கூட்டணியாக அமையும் என ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்!






















