நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி(85) காலமானார்!
வைகாசி 30, 2026 Published by Natarajan Karuppiah

பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். இச்சம்பவம் அஜித் ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த மோகினி மணி அவர்களுக்கு அஜித்குமார் தவிர அனில்குமார், அனூப்குமார் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

மோகினி மணியின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அஜித்தின் ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதல்களையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த துயரமான தருணத்தில், குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இறுதிச்சடங்குகளை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அஜித் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த மோகினி மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் வாடும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.















