நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ படப்பிடிப்பில் விபத்து: கழுத்தில் நரம்பு பாதிப்பு – 6 வாரங்கள் முழு ஓய்வு!
மார்கழி 25, 2025 Published by anbuselvid8bbe9c60f

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். ஜீப் காட்சி ஒன்றின் போது ஏற்பட்ட இந்த விபத்தில் அவருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விநாயகன் ஊடகங்களிடம் பேசிய போது, “என் கழுத்தில் ஒரு நரம்பு பாதிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்படாவிட்டால், எனக்கு மொபிலிட்டி இழப்பு ஏற்பட்டு பராலிசிஸ் ஆகியிருக்கும்” என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். MRI ஸ்கேன் மூலம் தசை மற்றும் நரம்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் 6 வாரங்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
‘ஆடு’ தொடரின் மூன்றாம் பாகமான இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி வருகிறார். ஜெயசூர்யா மீண்டும் ஷாஜி பப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க, விநாயகன், விஜய் பாபு, சைஜு குறுப்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் வர்மன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய விநாயகன், அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இறந்து போன கதாபாத்திரம் எப்படி திரும்ப வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த விபத்து அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
விரைவில் முழு குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்தி வருகின்றனர்!






















