Download App

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் காலமானார்

தை 22, 2026 Published by Natarajan Karuppiah

இந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அழைக்கப்படுபவர் மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல தலைமுறை ரசிகர்களைத் தனது குரலால் கட்டிப்போட்டவர்.

தற்போது திரையுலகை விட்டு ஓய்வெடுத்து வரும் எஸ்.ஜானகி அவர்களின் குடும்பத்தில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த ஜானகி அவர்கள், சினிமாவில் பாடத் தொடங்கிய பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் ராம் பிரசாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா. இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி கிருஷ்ணா, சென்னையைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் உமாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனினும், கருத்து வேறுபாடுகள் காரணமாக முரளி மற்றும் உமா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள்கள் இருவருக்கும் உமா திருமணம் செய்து வைத்துவிட்டார்.

விவாகரத்திற்குப் பிறகு முரளி கிருஷ்ணா ஐதராபாத்தில் தனது தாய் எஸ்.ஜானகியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது முதுமை காலத்தில் ஒரே மகனின் அரவணைப்பில் இருந்து வந்த எஸ்.ஜானகிக்கு, இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் எஸ்.ஜானகி அவர்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News