வசூல் வேட்டையில் ‘கருப்பு’: தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடியைக் கடந்து சாதனை!
வைகாசி 28, 2026 Published by Natarajan Karuppiah

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம், தமிழக பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையமைப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வந்தது. ஆன்மீகம், எமோஷன் மற்றும் மாஸ் ஆக்ஷன் கலந்த வித்தியாசமான திரைக்கதையைக் கையாண்டிருந்த இயக்குனர் ஆர் ஜே பாலாஜி, சூர்யாவின் வெறித்தனமான நடிப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.

வார இறுதி நாட்கள் மட்டுமின்றி, வேலை நாட்களிலும் குடும்பங்கள் குடும்பங்களாக மக்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருவதால், படம் வெளியாகி சில நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி என்ற இமாலய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிக வேகமாக ரூ.150 கோடி வசூலை எட்டிய திரைப்படமாக ‘கருப்பு’ மாறியுள்ளது. சூர்யாவின் அட்டகாசமான ‘கருப்புசாமி’ அவதாரமும், வழக்கறிஞர் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் தியேட்டர் ரிலீஸ் படம் ஒன்று பாக்ஸ் ஆபீஸை இந்த அளவிற்கு சுக்குநூறாக உடைத்திருப்பது அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ள ‘கருப்பு’, உலகளவில் தற்போது ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் பல திரையரங்குகளில் இன்னும் ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். படக்குழுவின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
















