‘ஜனநாயகன்’ மூன்றாவது சிங்கிள் ‘செல்ல மகளே…’ வெளியீடு: விஜயின் மனமுருகிய குரல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
மார்கழி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘செல்ல மகளே…’ இன்று (டிசம்பர் 26) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் ஆக்ஷன் திரில்லரில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, எதிர்மறை வேடத்தில் பாபி தியோல், மேலும் மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: அனிருத் ரவிச்சந்தர்.
விஜய் முழு அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், இது அவரது இறுதிப் படை என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேர் வரலாறு’ பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இன்று வெளியான ‘செல்ல மகளே…’ பாடல் ஒரு தந்தையின் மகள் மீதான அன்பை மனமுருக வெளிப்படுத்தும் மென்மையான மெலடி. இப்பாடலை விஜய் தானே பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்.

பாடலில் இடம்பெறும் வரிகள்:
“கண்ணே மணியே கண்ணிமையே… என் கைக்குள்ள மலர்ந்தவளே…”
எனத் தொடங்கி, தந்தையின் அன்பை சாஃப்ட் டோனில் வெளிப்படுத்துகிறது. இறுதியில்,
“எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈன்றாத…”
என விஜயின் அரசியல் டேக் லைனுடன் முடிகிறது.
விஜயின் உணர்ச்சிபூர்வமான பாடலுக்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்பாடல் யூடியூபில் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
நாளை (டிசம்பர் 27) மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழா தளபதி திருவிழாவாக நடைபெற உள்ளது. படம் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.



















