மாநாடு திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் – இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு!
November 25, 2025 Published by anbuselvid8bbe9c60f

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) நாயகனாக நடித்த அறிவியல் புனைவு அதிரடி திரைப்படம் ‘மாநாடு’ கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது.
இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் இப்படம்.
Time Loop என்ற வித்தியாசமான கான்செப்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மாநாடு’ வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது. தற்போது படம் வெளியாகி சரியாக 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். பரிசோதனை முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் உடனடியாக பதிலளித்து, “மாநாடு என்றென்றும் மறக்க முடியாத படைப்பு”, “இன்னும் பல மாநாடு வகை படங்கள் எதிர்பார்க்கிறோம் சார்” என பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘மாநாடு’ படத்தின் தாக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவுவது இந்தப் பதிவின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.























