மாம்பழமாக மாறிய அவகேடோ..!
வைகாசி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f
தாய்லாந்தில், ஃப்ரெஷ்ஷான அவகேடோ பழங்களை இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது. தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ஃப்ரெஷ் அவகேடோக்களைக் கொண்டு வந்தால், அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு என்று தாய்லாந்த்ஹு சட்டம் தெரிவிக்கிறது.
ஆனால், நேற்று, தாய்லாந்தில் க்லோங் லுவாங் மாவட்டத்தில் ஃபஹோன் யோதின் சாலையிலுள்ள தலாட் தாய் மொத்த விற்பனைச் சந்தையில் வியட்நாமிலிருந்து பெட்டி பெட்டியாக அனுப்பப் பட்ட அவகேடோ பழங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
வியட்நாமிலிருந்து வந்த 11 டன் அவகேடோ பழங்கள் “ மாம்பழம் என்ற பெயரில் தாய்லாந்திற்கு கடத்தி வந்து பதும் தானி மாகாணத்தில் மொத்த விற்பனைச் சந்தையில் வைக்கப் பட்டிருந்தது.
வாடிக்கையாளர் நல பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள், சுங்க அதிகாரிகள், மற்றும் விவசாய அதிகாரிகள் தலாட் தாய் சந்தையில் சோதனையில் ஈடுபட்ட போது இது கண்டுபிடிக்கப் பட்டது.
கோடியே 20 லட்சம் பாட் மதிப்புள்ள 11 டன் எடை கொண்ட 421 பெட்டிகள் நிறைய அவகேடோ பழங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக சிபிஐ இயக்குனர் லெப்டினெண்ட் ஜெனரல் ஜிரஃபோப் ஃபுரிதெத் கூறினார்.
சோதனைச் சாவடிகளைத் தவிர்ப்பதற்காக, பழங்கள் டிரெய்லர் லாரிகளில் கொண்டு செல்லப் படாமல், கூண்டு பொருத்தப்பட்ட பிக்கப் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த ஒரு ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட அவகேடோ பெட்டிகளில், ”மாம்பழம்” என்று சீன மொழியில் எழுதப் பட்டிருந்ததாகவும், பெட்டிகளில் ஒட்டப் பட்டிருந்த லேபிள்களின் மீது சாயம் பூசி உள்ளே இருக்கும் பொருட்களின் விவரத்தை மறைக்க முயன்றிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப் படுகிறது.
விற்பனையாளர்களைப் பற்றியோ, அவற்றைக் கடத்தியவர்கள் பற்றியோ எந்த தகவலும் வெளியிடப் படவில்லை. பறிமுதல் செய்யப் பட்ட பொருட்கள் விவசாயக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றிய விசாரணை தொடர்கிறது.












