Download App

மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தும் திமுகவின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது!

சித்திரை 8, 2026 Published by premkumar6c8c7c1bc8

தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டுப் பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மாற்றியமைத்து மேம்படுத்தும் மிக முக்கியமான முயற்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. பெண்களின் உழைப்பிற்கு அரசு அளிக்கும் அங்கீகாரமாக இத்திட்டம் கருதப்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2023 அன்று,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. உதவி என்ற சொல்லிற்குப் பதிலாக உரிமை என்ற சொல்லைப் பயன் படுத்தி பெண்களின் சுயமரியாதையை உயர்த்தும் திட்டமாக மாற்றப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் அயராது உழைக்கும் பெண்களின் பங்களிப்பைப் போற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று முதலமைச்சர் தெரிவிக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காகச் சுமார் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசுத் தரவுகள் மற்றும் விரிவான கள ஆய்வுகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் பயன் பெற்று வருகின்றனர். ஒவ்வொருமாதமும் 15-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இந்தத்தொகை நேரடியாக செலுத்தப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் நடுத்தர மற்றும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது. இத்தொகையை முறையாகச் சேமிக்க விரும்பும் பெண்களுக்காகக் கூட்டுறவுத் துறையின் கீழ் தமிழ் மகள் என்ற தொடர்வைப்பு நிதி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையில் ஒரு பகுதியைச் சேமித்து, எதிர் காலத் தேவைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளமுடிகிறது என்கின்றனர் திட்டத்தின் பயனாளர்கள்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிகப்படியாக 42% பெண் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம். இத்தகைய சூழலில், மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்துடன் இந்த உரிமைத் தொகையும் சேரும் போது, பெண்களின் மாதாந்திரச் சேமிப்பு கணிசமாக உயர்கிறது. இது அவர்களின் முடிவெடுக்கும் திறனையும், குடும்பத்தில் அவர்களுக்கான மரியாதையையும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிறமாநிலங்களும் பின் பற்றும் முன்மாதிரித் திட்டமாக இது உருவெடுத்துள்ளது. பெண்களின் சமூக-பொருளாதார சுதந்திரமே ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அச்சாணி என்பதை இத் திட்டம் மெய்ப்பித்துள்ளது. பெண்களை அதிகாரப்படுத்துவதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் புதியவரலாற்றைப் படைத்துவருகிறது என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மூன்று மாதகால உரிமைத் தொகையாக 3,000 ரூபாய் மற்றும் கோடை கால சிறப்புத் தொகையாக 2,000 ரூபாய் என மொத்தம் 5,000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தியது தமிழ்நாடு அரசு. மேலும் வருமானவரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டமும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் அறிவிப்புகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விடியல் பயணத் திட்டம், உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை, 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் என்று அனைத்தும் சேர்த்து பெண்களின் வேலைச்சுமையையும், நிதிச்சுமையையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற தேர்தல் முடிவுகளில் இவ்வறிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.