Download App

கருத்துக் கணிப்புகளில் முந்தும் திமுக கூட்டணி! அதிமுகவா? தவெகவா? யாருக்கு இண்டாவது இடம்?

சித்திரை 9, 2026 Published by premkumar6c8c7c1bc8

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைத் தெரிவிக்கின்றன. போல்ட்ராக்கர் ஆய்வின் படி, திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இதே போல், சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட இன்சைடு எலெக்‌ஷன் ஆய்வில், திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் லோக் போல் ஆய்வும் திமுக கூட்டணிக்கு 181 முதல் 189 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்த அனைத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணி 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்பதை உறுதிப் படுத்துகின்றன. தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் வேட்பாளருக்கான விருப்பத் தேர்வைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அரசியல் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் இருக்கிறார். இன்சைடு எலெக்‌ஷன் ஆய்வில் 44% மக்களும், லோக் போல் ஆய்வில் 41% மக்களும் மு.க. ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகியோருடன் ஒப்பிடும் போது மு.க. ஸ்டாலின் மிகவும் பரிச்சயமான நிலை பெற்ற தலைவராகப் பொது மக்களால் கருதப்படுகிறார்.

தமிழ்நாட்டு வாக்காளர்களின் ஒரு பகுதியினரிடையே பாஜக, பிரதமர் மோடி மீது காணப்படும் சந்தேகப் பார்வையும், அதிமுகவின் உட் கட்சிப்பூசல்களும் திமுகவிற்குச் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் தான் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மேற்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கடந்த முறையை விடச் சிறப்பாகச் செயல் படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சமூகரீதியாகப் பார்க்கும் போது முதலியார், நாயுடு, வெள்ளாளர், ஆதி திராவிடர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் பெருமளவில் திமுக கூட்டணியை நோக்கியே சாய்ந்துள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் மிக முக்கியமான காரணியாகப் பெண்களின் ஆதரவு முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. சுமார் 80% பெண்களின் வாக்குகளைத் திமுக கூட்டணி பெறும் என்று முன்னணி தேர்தல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் காலம் வரை அதிமுகவிற்கு இருந்த பெண் வாக்காளர்களின் செல்வாக்கு தற்போது திமுகவை நோக்கி நகர்ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பெண்கள் முன்னேற்றத்திற்காகத் திமுக அரசு செயல் படுத்தி வரும் நேரடி நலத்திட்டங்களே இதற்கு மிக முக்கியக் காரணமாம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பெண்வாக்காளர்களில் 85% பேர் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அதே போல், ஏறக்குறைய 41% பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்க் கல்வி செல்லும் மாணவிகளுக்கு வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இவை தவிர 20 லட்சம்மாணவர்கள் பயன் பெறும் காலை உணவுத் திட்டம், பணிக்குச் செல்லும் தாய்மார்களின் காலை நேரப்பணிச்சுமையைப் பெருமளவு குறைத்துள்ளதும்,  சிறுமிகளுக்குக் கருப்பை வாய்புற்று நோயைத் தடுக்க சுமார் 36 கோடி ரூபாய் செலவில் இலவசத் தடுப்பூசி போடும் திட்டம் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதைக் களத்தில் காண முடிகிறது என்கின்றன கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனங்கள்.

ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்குக் கிடைத்து வரும் இந்த நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பெண்களின் முன்னேற்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டும் கூடுதல் அக்கறையும் பெண்களை திமுக பக்கம் உறுதியாக நிற்கச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கான நலத்திட்டங்கள், ஸ்டாலின் மீதான நம்பிக்கை, அதிமுக மீதான அவநம்பிக்கை, மோடி மீதான அச்சம் ஆகியவை எல்லாம் சேர்ந்து திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் முக்கியக் காரணிகளாக அமையும் என்கின்றன கருத்துக் கணிப்புகள்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.