வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க திமுக 8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு: கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்கு திட்டமா?
சித்திரை 7, 2026 Published by premkumar6c8c7c1bc8

திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன், “வீட்டு பயன்பாட்டு பொருட்கள் வாங்குவதற்கு ₹8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்” என்ற புதிய அறிவிப்பையும் திமுக வெளியிட்டுள்ளது. இது வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதியா அல்லது திட்டமிட்ட பொருளாதார நகர்வா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற முக்கிய காரணம் திமுக மீதான நம்பகத்தன்மையே. கடந்த காலங்களில் ₹5,000 போன்ற நேரடி நிதி உதவிகளை அரசு வழங்கியிருப்பதால், “திமுக சொன்னால் நிச்சயம் செய்வார்கள்” என்ற நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
வழக்கமாக அரசு பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து நேரடியாக வழங்கும் போது, அதன் தரம் குறித்த அச்சமும், கொள்முதல் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பும் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும். ஆனால், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கூப்பன் முறை’ வெளிப்படையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை, தங்களுக்கு விருப்பமான கடைகளில் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். இது பயனாளர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குவதோடு, தரமான பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
மேலும், மக்கள் இந்தக் கூப்பன்களை தங்களுக்கு அருகிலுள்ள சிறு மற்றும் நடுத்தர கடைகளில் பயன்படுத்தும் போது, உள்ளூர் பொருளாதாரம் வலுவடையும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தெருக்கோடியில் இருக்கும் எலக்ட்ரானிக் கடைகளுக்கும் இது பெரிய வணிக வாய்ப்பை உருவாக்கும்.
இந்தத் திட்டத்தை வெறும் இலவசத் திட்டமாக பார்க்காமல், மக்களை பொருளாதாரத்தின் ‘பங்கேற்பாளர்களாக’ மாற்றும் முயற்சியாக நிபுணர்கள் கருதுகின்றனர். பெண்களுக்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் வீட்டு வேலைகள் எளிதாகும். இந்த உதவி அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். ஏற்கனவே தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயணம் மாதத்திற்கு சுமார் ₹900 வரை சேமிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல், ₹8,000 கூப்பன் மூலம் வாங்கப்படும் வாஷிங் மெஷின் போன்ற கருவிகள் பெண்களின் கடினமான வீட்டு வேலைகளை பெருமளவில் குறைக்கும். இதனால் மிச்சமாகும் நேரத்தை பெண்கள் தங்களின் கல்வி, சுயதொழில் அல்லது வருமானம் ஈட்டுவதற்காக பயன்படுத்தலாம். இது ஏற்கனவே 40.5% ஆக உயர்ந்துள்ள தமிழக பெண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை மேலும் வலுப்படுத்தும்.
தொழிற்துறை ரீதியாகவும் இத்திட்டம் தமிழகத்திற்கு பெரும் சாதகமாக அமையும். இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழகத்தில்தான் உள்ளனர். வீட்டுப் பணிச்சுமை குறையும்போது தொழிற்சாலைகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், தமிழ்நாடு மின்னணு பொருட்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியாவில் முன்னிலையில் இருப்பதால், இக்கூப்பன்கள் மூலம் உருவாகும் தேவைகள் உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு அதிக லாபத்தைத் தரும்.
மகளிர் உரிமைத் தொகை எப்படி மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து சந்தையில் பணப்புழக்கத்தை உருவாக்கியதோ, அதேபோல் இந்த ₹8,000 கூப்பன்களும் தமிழகத்தின் தற்போதைய 11.19% பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும்.
சுருக்கமாகச் சொன்னால், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களை பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்க வைக்கும் ஒரு ஆக்கபூர்வமான திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.













