டயட் மாத்திரைகள் ஜாக்கிரதை!
ஆனி 4, 2025 Published by anbuselvid8bbe9c60f
டயட், உடற்பயிற்சி என்று எதையாவது செய்து உடலை இளைக்க வைத்தாற் போதும் என்ற மக்களின் தவிப்பை முதலாக்கி, லாபம் தேடும் பலரில் ஒருவராக, விஷத் தன்மை உள்ள டி என் பி என்ற தடை செய்யப் பட்ட வேதிப்பொருள் கலந்த மாத்திரைகளை விற்ற ஒருவர் கைது செய்யப் பட்டார்.
வேல்ஸின் பிரிட்ஜெண்ட் பெருநகரத்தில் உள்ள மேஸ்டெக் பகுதியில் 33 வயதான கைல் ஈநோஸ் என்பவர், சட்டவிரோதமாக விற்கப்படும் 2,4-டினிட்ரோஃபினோல் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி டயட் மாத்திரைகளை செய்து விற்றதாக, பல்வேறு புலனாய்வு முயற்சிகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
இந்த வேதிப்பொருள் கடுமையான உடல் பிரச்சினைகளையும், அல்லது மரணத்தையும் கூட விளைவிக்கக் கூடும் என்று உணவு தர மேம்பாட்டு முகமை தெரிவிக்கிறது. டார்க் வெப் மூலமாக சீனாவிலிருந்து இந்த வேதிப்பொருளை வாங்கிய கைல் ஈனோஸ், தமது படுக்கையறையிலேயே வைத்திருக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி டயட் மாத்திரைகளைச் செய்து தமது வெப்ஸைட்டில் அவை விட்டமின் மற்றும் மினரல்கள் கலந்த டயட் மாத்திரைகள் என்று விளம்பரப் படுத்தி ஆனலைனில் விற்றிருக்கிறார். இதனால் இவர் மீது பல்வேறு மருந்து தொடர்பான குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன.
மருந்தாளுநர் அல்லாத ஒருவரால் செய்யப்பட்ட விஷத் தன்மை உள்ள மருந்தை விற்றல், உரிமம் இல்லாமல் வேதிப்பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் அந்தபொருளை விற்றல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைல் ஈனோஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அது மட்டுமல்ல, அவர் முன்னர் ஃபெண்டானில் என்ற மருந்தை விநியோகித்ததற்காக தண்டனை பெற்றதைத் தொடர்ந்து கொடுக்கப் பட்ட கடுமையான குற்றவியல் தடுப்பு உத்தரவையும் புறக்கணித்துள்ளார் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
சிலர் சமூகத்தின் பலவீனமான பகுதிகளை இலக்காக்கி, மனித நேயம் இன்றி விஷத்தை விற்று பணம் சம்பாதிப்பது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இந்த வழக்கு வலியுறுத்துவதோடு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது என்றும் தேசிய குற்றவியல் முகமையின் தலைவர் அலிஸன் அபாட் கூறினார்.












