காப்பீட்டுத் துறையிடம் “கரடி” விட்ட நால்வர் கலிஃபோர்னியாவில் கைது!
வைகாசி 27, 2025 Published by anbuselvid8bbe9c60f
கரடி தங்கள் காரை உடைத்துவிட்டதாக காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்புத் தொகை கோரிய நால்வர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த நால்வர் கலிஃபோர்னியா காப்பீட்டுத் துறையிடம் கரடி தங்கள் காரை கரடி சேதப்படுத்தி விட்டதாக விடியோ ஆதாரத்துடன் ஆறு இலக்க தொகையை இழப்புத் தொகையாகக் கோரினர். ஆனால், அந்த விடியோவில் கரடி போல உடையணிந்த ஒருவர் காரை சேதப்படுத்துவதை நிபுணர்கள் கண்டுபிடித்ததால், நால்வரும் கது செய்யப் பட்டனர்.
ரூபன் தம்ரசியன் -26, அராரத் சிர்கினியன்-39, வாஹே முரத்கன்யன்-32, ஆல்ஃபியா ஸக்கர்மென் -39 ஆகிய நால்வர் காப்பீட்டு மோசடி மற்றும் சதி தொடர்பான புகார்களின் பேரில் கைது செய்யப் பட்டதாக காப்பீட்டுத் துறை தெரிவித்தது. காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 839 அமெரிக்க டாலர்களை பெறும் செய்யும் நோக்கத்துடன் இந்த மோசடி நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், இவர்கள் நால்வரும் தங்கள் 2010 ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆரோஹெட் ஏரிக்கருகில் நிறுத்தப் பட்டிருந்த போது, ஒரு கரடி தங்கள் காருக்குள் ஏறி உள்புறத்தை சேதப்படுத்தி விட்டதாகக் கூறினர். சான் பெர்னாடினோ மலையடிவாரத்தில் அமைந்த அந்த பகுதி பெரிய கருங்கரடிகள் அதிகமாக நடமாடும் இடம் என்பது அங்கு அனைவரும் அறிந்ததே.
இவர்கள் பெயர் வெளியிடப் படாத அந்த காப்பீட்டு நிறுவனத்திடம் விடியோ ஆதாரத்தையும் கொடுத்தனர். காரின் பக்கவாட்டு கதவு வழியாக காருக்கும் நுழையும் ஒரு கரடி போன்ற உருவம், காரின் சீட்டை கிழித்து கார் முழுவதும் நகத்தால் கீறி சேதப்படுத்துவது அந்த விடியோவில் படமாக்கப் பட்டிருந்தது.
“இந்த விடியோவை புலனாய்வுத் துறை நிபுணர்கள் சோதித்துப் பார்த்த போது அது உண்மையான கரடி அல்ல, கரடி போல உடையணிந்த ஒரு மனிதர் என்று கண்டுபிடிக்கப் பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நால்வரும் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு புகார்களை இருப்பதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர். அதே தேதி மற்றும் அதே இடத்தில், மெர்சிடிஸ் ஜி 63 ஏஎம்ஜி 2015 மற்றும் ஒரு 2022 மெர்சிடிஸ் இ 350 தொடர்பான இரு புகார்கள்.
சந்தேகத்திற்குரிய நால்வரும் இந்த கார்களுக்குக்கும் முதல் காருக்கு கொடுத்தது போலவே விடியோ ஆதாரங்களை கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் வெறும் சந்தேகத்தின் பேரில் நடவடிக்கை எடுக்காமல், உண்மையை மோப்பம் பிடிப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காப்பீட்டுத் துறையில் கலிஃபோர்னிய கடல் மற்றும் வனவிலங்குத் துறையைச் சேர்ந்த ஒரு உயிரியல் நிபுணரும் இருந்ததால், அவர் அந்த மூன்று விடியோக்களையும் பரிசோதித்து, அவை நிச்சயமாக கரடிகள் அல்ல; கரடி வேடமணிந்த மனிதன் தான் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
புலனாய்வுத் துறையினர் சந்தேகத்திற்குரிய நால்வரின் வீடுகளிலும், சோதனை நடத்திய போது, ரோமம் அடர்ந்த கரடி முகம், கரடியின் நகங்களை ஒத்த உலோக கத்திகள், உள்பட முழு கரடி காஸ்ட்யூமை கண்டுபிடித்தனர்.
லேசான பரவுன் நிறத்தில் இருந்த காஸ்ட்யூமை சோதித்த கலிஃபோர்னிய கடல் மற்றும் வனவிலங்குத் துறையினர், அந்த பகுதியில் ஒரு சில அடர்த்தியான ப்ரவுன் நிற கரடிகளைத் தவிர, கருங்கரடிகள் மட்டுமே வாழ்வதாகவும், கலிஃபோர்னியாவில் லேசான பிரவுன் நிறத் தோல் கொண்ட கரடிகள் 1920லேயே முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும் தெரிவித்தது.
கார் சேதப்படுத்தப் பட்டதாக ’கரடி’ விட்ட நால்வரும் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.












